செயற்கையான சிமென்ட் தட்டுப்பாடு பில்டர்ஸ் அசோசியேஷன் குற்றச்சாட்டு
செயற்கையான சிமென்ட் தட்டுப்பாடு பில்டர்ஸ் அசோசியேஷன் குற்றச்சாட்டு
மதுரை: சிமென்ட் விற்பனையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டனர் என்று பில்டர்ஸ் அசோசியேஷன் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் சிமென்ட் விலை கடந்த சில நாட்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளோர் தமிழக அளவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பில்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். இந்த அமைப்பின் சேர்மன் பாலசுப்ரமணியன் கூறியதாவது: சிமென்ட் விலை உயர்வு வரலாறு காணாத அளவில் உள்ளது. இதனால் பெடரேஷன் ஆப் சிவில் இன்ஜினியர்ஸ், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என ஏழு சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 15 நாட்களுக்கு முன் 145 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை தற்போது 280 முதல் 305 ரூபாய் வரை உள்ளது. இது அபரிமிதமானது. அரசிடம் சிமென்ட் இல்லாததால் தனியாரிடம் வாங்கும் நிலை உள்ளது. செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் 220 மில்லியன் டன் உற்பத்தி திறன் உள்ளது. ஆனால் 160 டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை சரிசெய்ய கரும்பு, நெல்லுக்கு உள்ளது போல 'சிமென்ட் ரெகுலேட்டட் அதாரிட்டி' உருவாக்கப்பட வேண்டும். தற்போது அப்ரூவல் பெற்ற வீடுகளுக்கும், அரசின் கான்கிரீட் வீடு திட்டத்திற்கும் 200 ரூபாய்க்கு சிமென்ட் தருவதாக அரசு அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு. அவற்றை பெற தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தாலும் கிடைக்காது. சாதாரணமாக யாரும் 400 சதுர அடியில் வீடுகட்டுவதில்லை. எனவே சிமென்ட் விலையை குறைக்க வேண்டும். 15 நாட்களுக்குள் சிமென்ட் விலையை குறைக்காவிட்டால், நாங்கள் இனி சிமென்ட் வாங்க மாட்டோம் என்றார். இந்த அமைப்பினர் அடுத்த கட்டமாக சென்னை, டில்லியில் ஊர்வலம் நடத்த உள்ளனர். தமிழக முதல்வரிடமும் மனு கொடுக்க உள்ளனர்.
Topics :
Advertisement
Advertisement
Advertisement